இந்தியா
தந்தை பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் முதல்வரின் சகோதரி!
ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் தெலுங்கானாவில் தனிக்கட்சி தொடங்கியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் தற்போது அவர் ஆட்சியில் உள்ளார் என்பதும் தெரிந்ததே. அவரது ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா என்பவர் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தனது தந்தை ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி பிறந்த நாளில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.
தெலுங்கானாவில் கடந்த 7 ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகரராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையில் இருந்து மீளவில்லை என்று அவர் கட்சி தொடங்கிய நாளில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு தனது வாக்குறுதியை அனைத்தையும் மறந்து விட்டது என்றும் தெலுங்கான மக்களின் கனவுகள் முழுவதும் சிதைந்து விட்டதாகவும் அவர் கூறினார். தெலுங்கானா மாநிலத்தில் ஏழை எளியவர்கள் இன்னும் ரேஷன் கார்டுகள், தங்குமிடம், மருத்துவ மனை வசதி ஆகியவை இல்லாமல் சிரமப்படுவதாகவும், இந்த ஏழு ஆண்டுகளில் சந்திரசேகர் ராவின் ஆட்சியால் பொதுமக்கள் மிகவும் வறுமையில் இருந்து மீளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சந்திரசேகரராவ் குடும்பம் எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு செல்வச் செழிப்புடன் இருப்பதாகவும் தெலுங்கானா மக்களை அவரது ஆட்சியில் இருந்து மீட்க வேண்டும் என்பதே தனது கட்சியின் நோக்கம் என்றும் ஷர்மிளா கூறியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கானாவில் ஷர்மிளா தலைமையில் ஆட்சி நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.