சினிமா செய்திகள்
ரஜினி, அஜித், விஜய் எங்கே? இயக்குனர் அமீர் காட்டமான கேள்வி!
மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள புதிய ஒளிப்பதிவு சீருத்திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுக்காத ரஜினி, அஜித், விஜய் எங்கே? என இயக்குனர் அமீர் காட்டமான கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் புதிய ஒளிபரப்பு சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திற்கு கமல், சூர்யா, கார்த்தி, விஷால் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முதல்வர் அவர்களையும் நடிகர் சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர் என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விஷயத்தில் நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் அமீர் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் ஒளிப்பதிவு சீர்திருத்த மசோதா குறித்து ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் குரல் கொடுக்காமல் மெளனமாக இருப்பது வருத்தத்திற்குரியது என்றும், அனைத்து தரப்பினர்களும் ஒன்றாக எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் நடிகர் சூர்யா இந்த சட்டத்துக்கு எதிராக டுவிட்டை பதிவு செய்தபோது சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் போட்டது. இந்த தீர்மானத்தை கண்டிக்காமல் சினிமா சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சூர்யா தனது சொந்த விஷயத்திற்கா டுவிட் போட்டார் என்றும் பொதுப்படையான ஒரு விஷயத்திற்கு டுவிட் செய்தபோது அதற்கு ஆதரவு தர வேண்டியது நடிகர் சங்கம் உட்பட அனைத்து சங்கங்களின் கடமை என்றும் அவர் தெரிவித்தார். இயக்குநர் அமீர் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் நிலையில் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.