தமிழ்நாடு
ஸ்டேன் சாமி மறைவுக்கு ஐ.நா. இரங்கல் மற்றும் கண்டனம்!
பழங்குடி இன போராளி மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி நேற்று காலமான நிலையில் அவருடைய மரணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிர மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதல் குறித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி ஸ்டேன் சாமியை விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கில் கைது செய்தனர்
ஸ்டேன் சாமி தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினர் உடன் தொடர்பில் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே ஒரு சில நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சாமிக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் ஜாமீனில் கூட அவரை விடுவிக்க வில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் சரியான மருத்துவ வசதி கிடைக்காததால் ஸ்டேன் சாமி மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஸ்டேன் சாமி மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இது கொலை என்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி அவர்கள் மறைவிற்கு ஐ.நா இரங்கல் தெரிவித்துள்ளது. அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி யாரையும் கைது செய்யக் கூடாது என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டேன் சாமி மறைவுக்கு ஐநா கண்டனம் தெரிவித்ததோடு இரங்கலும் தெரிவித்துள்ளது ஆறுதலாக இருந்தாலும், ஸ்டேன் சாமி மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலித்து வருகிறது.