தமிழ்நாடு
காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் யார் பொறுப்பு? பதிவாளர் அறிக்கை
![ration rice - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/05/ration-rice.jpg)
ரேஷன் கடைகளில் காலாவதி பொருட்கள் இருந்தால் அந்த ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளே பொறுப்பு என கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் ஆய்வில் காலாவதியான ரேஷன் பொருட்கள் இருந்தால் உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2000/- மற்றும். 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருட்களின் தொகுப்பு ஆகியவற்றை 15.06.2021 முதல் அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பார்வையில் காணும் பத்திரிக்கைச் செய்தியில் திருவள்ளூர் மண்டலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருட்களின் தொகுப்பில் காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்கப்பட்டதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 14 மளிகைப் பொருட்களை பைகளில் வைக்கும்போது, தற்போது பெறப்பட்ட டீ தூள் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, தவறுதலாக நியாயவிலைக்கடையில் ஏற்கனவே இருப்பிலிருந்த டீ தூள் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதிலிருந்து காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகள் உரிய நேரத்தில் அகற்றப்படாமல்
தொடர்ந்து நியாய விலைக்கடைகளிலேயே வைக்கப்பட்டிருந்தது தெரியவருகிறது.
மேற்குறிப்பிட்ட நியாயவிலைக்கடையினை ஆய்வு மேற்கொண்ட ஆய்வு அலுவலர் நியாயவிலைக்கடையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகளை ஆய்வின் போது சரிபார்த்து திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்திருப்பின் இது-போண்ற தவறுகள் நிகழ்ந்திருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.