இந்தியா
நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்துவது எப்படி? சி.பி.எஸ்.இ சுற்றறிக்கை!
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது எப்படி என்பது குறித்த சுற்றறிக்கையை சிபிஎஸ்சி வெளியிட்டுள்ளது
கடந்த 2000 – 2021 ஆம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் அந்த பொதுத் தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. விரைவில் மாணவர்களுக்கான மதிப்பெண் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் மூன்றாவது அலை இந்தியாவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்கூட்டியே பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சிபிஎஸ்சி ஆலோசனை செய்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்துவது எப்படி என்பது குறித்த சுற்றறிக்கை ஒன்றை சிபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இரு பருவங்களாக பிரித்து தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு அந்த இரண்டு பருவங்களில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. எனவே நடப்பு கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உள்பட எந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.