தமிழ்நாடு
முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் தம்பிதுரை?: செந்தில் பாலாஜி ஆவேசம்!
![Senthil Balaji and thambidurai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Senthil-Balaji-and-thambidurai.jpg)
தினகரன் ஆதரவாளர்களான செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இடைத்தேர்தலை சந்திக்க அவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அமமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு எப்படி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்கிற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையாக தாக்கி பேசினார்.
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால், ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெற முடியாது. 20 தொகுதியிலும் அமமுக வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தம்பிதுரை மக்களவை துணைத் தலைவராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளில் கரூர் தொகுதிக்கு செய்தது என்ன? முதல்வர் பதவி மீது தம்பிதுரைக்கு ரொம்ப ஆசை என்றார். தொடர்ந்து பேசிய அவர் விஜயபாஸ்கரை விமர்சித்து பேசினார்.