தமிழ்நாடு
நாளை திறக்கப்படுகிறது தஞ்சை பெரிய கோவில்: 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை!
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி என்றும் பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து மாஸ்க் அணிந்து தரிசனம் செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே பழனி கோவில் உள்பட பல கோயில்கள் நாளை முதல் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் சற்று முன் தஞ்சை பெரிய கோவில் நாளை முதல் திறக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிலுக்கு வர அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை பெரிய கோவில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதும், தஞ்சை பெரிய கோவில் முழுவதும் சானிடைசர் மூலம் சீரமைத்து வருவதாகவும் செய்திகள் வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை வரும் பக்தர்கள் வெப்பமானி மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்து அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயில் மட்டுமின்றி நாளை முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.