தமிழ்நாடு
கொரோனா 3வது அலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நீடித்து வரும் நிலையில் இந்த அலை இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மூன்றாவது அலை தொடங்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மூன்றாவது அலைக்கு முன்கூட்டியே தமிழக அரசு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழக அரசு ரூபாய் 100 கோடி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 100 கோடியை கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒதுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிதி மூலம் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை சமாளிக்கவும், மூன்றாவது அலைக்கு மக்களை தயார்படுத்தவும் செலவு செய்யப்படும் என்றும் குறிப்பாக 3வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக அதிகம் செலவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்றாவது அலை வருவதற்கு முன்பாகவே அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் மூன்றாவது அலையை எளிதாக கடந்து விடலாம் என்றும் தமிழக அரசின் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.