தமிழ்நாடு
நீட் தாக்கம் ஆய்வுக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டதா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு சமீபத்தில் நீட் தாக்கம் குறித்த ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் குழு, 3 கட்ட ஆலோசனை முடித்துவிட்டு நான்காம் கட்ட ஆலோசனையை விரைவில் நடத்த உள்ளது. மேலும் இந்த ஆய்வு குழு விரைவில் தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நீட்தேர்வு தாக்கம் குறித்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதி கையெழுத்திட்ட திட்டம் என்றும் இதனை எதிர்த்து ஆய்வுக்குழு ஒன்றை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீட் தாக்கம் குறித்த குழுவுக்கு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி வழங்கப்பட்டதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என்றும் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக இந்த வழக்கு போகும் போக்கைப் பார்க்கும்போது நீட் தாக்கம் குழு அறிக்கை தாக்கல் செய்யுமா? அப்படியே அறிக்கை தாக்கல் செய்தாலும், அந்த அறிக்கை மூலம் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி தற்போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.