இந்தியா
ஜம்முகாஷ்மீர், லடாக் வேறு நாடா? டுவிட்டர் இந்தியா இயக்குனர் மீது வழக்கு!
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய சமூகவலைத்தளம் கொள்கையை டுவிட்டர் ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்று உள்ளது என்பது தெரிந்ததே. இதனால் டுவிட்டருக்கும் இந்திய அரசுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் வரைபடத்தை தவறாக வெளியிட்டு டுவிட்டர் தற்போது சர்ச்சைய்யில் சிக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் பகுதியான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை தனிநாடாக குறிப்பிட்டு டுவிட்டரில் வரைபடம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வரைபடத்திற்கு இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டுவிட்டர் இந்தியா இயக்குனர் மணிஷ் மகேஸ்வரி மீது உத்தரப் பிரதேச மாநில காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505 (2) தொழில்நுட்ப சட்டம் 2008 பிரிவு 74-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் தவறான வரைபடத்தை ட்விட்டர் இந்தியா சற்றுமுன் நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை தனி நாடாக சித்தரித்திருந்த வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு லடாக் தலைநகரான லே-வை சீனாவின் பகுதியாக டுவிட்டர் சித்தரித்து வரைபடத்தை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.