தமிழ்நாடு
தடையை மீறி பட்டாசு வெடித்ததால் 108 வழக்குகள் பதிவு!
பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த இரண்டு மணி நேரம் எது என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் இந்த கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததால் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயித்தது. இதனை மீறினால் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188-ன் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆளில்ல விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் திருநெல்வேலியை அடுத்த சேரன்மாதேவியில் தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 108 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.