இந்தியா
ஜூலை மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் – என்ன காரணம்?
இந்திய அளவில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் சுமார் மூன்றரை கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அளவில் பெருமளவு தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் என்று சொல்லப்படுகிறது.
இந்திய ஒன்றிய அரசு, ஜூலை மாதம் சுமார் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெறும் என்று கூறியுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் போடப்படும். இது, இந்திய அரசு வைத்துள்ள ஒரு நாளில் 1 கோடி தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்கிற இலக்குக்கு உதவி செய்வதாக இருக்காது.
இந்தியாவில் நடப்பு ஜூன் மாதத்தில் தடுப்பூசி போடும் பணி எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளது. அதாவது ஜூன் 1 ஆம் தேதி முதல், ஜூன் 27 ஆம் தேதி வரை சுமார் 10.8 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதே அளவு வேகம் ஜூலை மாதத்தில் இருக்காது என்று அஞ்சப்படுகிறது.