தமிழ்நாடு
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் 3வது கொள்ளையன் கைது!
சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட இரண்டு கொள்ளையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மூன்றாவது கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த கும்பல் ஒன்றை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி மற்றும் அரியானா மாநிலத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார், ஹரியாணா மாநில போலீசாரின் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருந்த அமீர் மற்றும் வீரேந்தர் ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாவதாக ஒரு கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஹரியானாவை சேர்ந்த இந்த கொள்ளையனை கைது செய்த போலீசார் இன்று மாலை அல்லது நாளை சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்றாவது கொள்ளையனிடம் விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வீரேந்திரன் என்ற கொள்ளையன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் அவனை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. மேலும் வீரேந்திரனை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன