தமிழ்நாடு
காலை 6 மணிக்கே திறந்த கோவில்கள்: பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம்!
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோவில்கள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 6 மணி முதலே அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அந்த தளர்வுகளில் ஒன்றாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனை அடுத்து மேற்கண்ட 4 மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றன என்பதும் காலை 6 மணி முதலே பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவில்களில் அரசு கூறிய விதி முறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும், 5 மீட்டர் இடைவெளியுடன் ஒருவருக்கொருவர் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், கோவில் முழுவதும் அவ்வப்போது கிருமிநாசினி பயன்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.