தமிழ்நாடு
முதல்வரிடம் சொல்வேன்: போலீசார் மிரட்டியவுடன் போராட்டம் செய்த திமுகவினர் எஸ்கேப்!
ஊரடங்கின்போது லாரிகள் ஓடியதை கண்டித்து திமுகவினர் போராட்டம் செய்த நிலையில் அங்கு வந்த போலீஸார் போராட்டம் செய்தால் நேரடியாக முதல்வரிடம் சொல்வேன் என கூறியதால் திமுகவினர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்காக மூலப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகளை திமுகவினர் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். ஊரடங்கு காலத்தில் வாகனங்களை எப்படி இயக்கலாம் என கூறி வாகனங்களை அவர்கள் நிறுத்தி வைத்தனர்
விக்கிரவாண்டி – தஞ்சாவூர் சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலைக்காக மூலப் பொருட்கள் டிப்பர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றைத் திமுகவினர் தடுத்து நிறுத்தி ஊரடங்கு காலத்தில் லாரிகளை இயக்குவதை கண்டித்து போராட்டம் நடத்தினர்
இதுகுறித்த தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் ஊரடங்கு நேரத்தில் போராட்டம் நடத்தியது தவறு என்றும் ஆளும் கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்றும் வினவினர். அப்போது போலீசாரிடமும் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொறுமை இழந்த போலீசார் அனைவரையும் வீடியோ எடுங்கள், முதல் அமைச்சருக்கு அனுப்ப வேண்டும் என்றவுடன் தங்களின் தவறை ஒப்புக்கொண்டு திமுகவினர் அங்கிருந்து எஸ்கேப் ஆகினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.