தமிழ்நாடு
தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கு சலுகை: கட்டணம் வெறும் ரூ.2 மட்டுமே!
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற காரணத்தினால் தனியார் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்யவில்லை. இதனால் தனியார் பேருந்துகள் கூட்டம் இன்றி அல்லது வெறும் ஆண்கள் பயணிகளுடன் மட்டுமே இயங்கி வந்தது.
இந்த நிலையில் இந்த பிரச்சினையை சமாளிக்கும் விதத்தில் நாமக்கல்லை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் பெண்களுக்கு கட்டண சலுகையை அறிவித்து உள்ளார். அவர் பெண்களுக்கு கட்டணம் ரூபாய் இரண்டு மட்டுமே என்றும் ஆண்களுக்கு ரூபாய் பத்து மட்டுமே என்றும் அறிவித்துள்ளார்.
நாமக்கல்லில் எஸ்எம்ஆர் என்ற தனியார் பேருந்து நடத்திவரும் குமரேசன் என்பவர் தான் இந்த கட்டண சலுகையை அறிவித்து உள்ளார். நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் இந்த பேருந்து பேருந்தில் இதுவரை 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் தற்போது பெண்களுக்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே அவர் கட்டணமாக வசூல் செய்கிறார். இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டு இந்த பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம் என்ற சலுகையையும் அவர் அறிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதால் தனியார் பேருந்துகளில் பெண்கள் பயணம் செல்லாமல் இருக்கும் நிலையில் பெண்களை தங்கள் பேருந்துகளிலும் பயணம் செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இந்த சலுகையை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 15 ரூபாய் கட்டணத்தை ஆண்களுக்கு ரூபாய் 10 என் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தனியார் பேருந்துகளும் பெண்கள் பயணம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதிக விலை கொடுத்து வாங்கிய பேருந்தை பயணிகள் இல்லாமல் எப்படி இயக்குவது, அதனால் கட்டணத்தை குறைத்து உள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர் குமரேசன் தெரிவித்துள்ளார். இவரைப்போலவே தமிழகத்திலுள்ள மற்ற தனியார் பேருந்து உரிமையாளர்களும் கட்டணத்தை குறைத்து பெண்களை தங்கள் பேருந்துகளில் பயணம் செய்ய வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.