தமிழ்நாடு
பலமுறை ரகசியமாக சந்தித்த தினகரனும், ஸ்டாலினும்: ஓபிஎஸ் அட்டாக்!
![Dinakaran and OPS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Dinakaran-and-OPS.jpg)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கியதாகவும், இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து இதற்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கியிருந்து சென்ற பிறகு தான் நாங்கள் ஓட்டலுக்கே சென்றோம். ஒரே ஓட்டலில் பல தலைவர்கள் தங்கியிருப்பது புதிதல்ல, வழக்கமான ஒன்று தான். ஆனால் தாங்கள் சந்தித்து பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனும் ஸ்டாலினும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். கடம்பூர் ராஜுவை அதிமுகவின் ஸ்லீப்பர் செல் என்று முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளது தொடர்பான முழுவிவரம் இரு தரப்பில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே ஓபிஎஸ் தன்னை ரகசியமாக சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைக்க வலியுறுத்தியதாக தினகரன் கூறி ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.