தமிழ்நாடு
டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் எல்லாமே வரும்: அதிமுகவை தாக்கும் துரைமுருகன்!
அதிமுக ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் எல்லாம் வருவதாகவும் திமுக ஆட்சியில் எதுவும் வருவதில்லை என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு கட்சியினர் டெங்குவை தடுக்க அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அதன் பின்னரே உஷாரான தமிழக அரசு தற்போது தீவிர நடவடிக்கையில் இறக்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் திமுக சார்பில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நேற்று துவங்கியது.
இதனை அண்ணா அறிவாலயத்தில் துவங்கி வைத்து பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக அரசு டெங்கு காய்ச்சலுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதனையடுத்து பேசிய துரைமுருகன், அதிமுக ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் எல்லாமே வரும்.
முன்னர் திமுக ஆட்சியில் இருந்த போது இது போன்று எந்த பிரச்னையும் வரவில்லை. காய்ச்சலைப் பொறுத்தவரையில், அதிமுக அரசு அதனை தடுக்கும் நடவடிக்கையில் மந்தமாகவே செயல்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.