தமிழ்நாடு
ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்றும் நாளையும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மிக அதிகமான கூட்டம் இருப்பதால் பொதுமக்கள் பணத்தையும் பொருட்படுத்தாது ஆம்னி பேருந்துகளில் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அதிக கூட்டம் வருவதை கணக்கில்கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதுகுறித்த புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்றைய சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் அறிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகன சட்டப்படி நிபந்தனையை மீறி விதமாக பத்தாயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.