தமிழ்நாடு
அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ‘கல்வித் தொலைக்காட்சி’ நிறுத்தப்படுமா?- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழத்தில் வரும் திங்கட் கிழமையான 10 ஆம் தேதி முதல், இம்மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் செய்யப்பட உள்ளது. இந்த சமயத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் இந்த முழு முடக்க நடவடிக்கை அமல் செய்யப்பட உள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்பு எடுத்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் பாடங்களைக் கற்கும் நோக்கில் கடந்த அதிமுக ஆட்சியில், ‘கல்வித் தொலைக்காட்சி’ ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திமுக அரசு, இந்த கல்வித் தொலைக்காட்சித் திட்டத்தைக் கைவிடுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்கிற ஒரே காரணத்துக்காக நல்ல விஷயங்களை திமுக ஆட்சி கைவிடாது. கல்வித் தொலைக்காட்சித் திட்டம் நன்றாகவே இருக்கிறது. அதை மேலும் மெருகேற்றும் பணியை நாங்கள் முடுக்கி விடுவோம்’ என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.