தமிழ்நாடு
தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்: கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு
![MK Stalin 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/05/MK-Stalin-1.jpg)
தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுடைய கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இன்று காலை முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவை,
- ஆவின் பால் லிட்டருக்கு 3 குறைப்பு
- கொரோனா நிவாரணத்தில் முதல் தவணையாக ரூ.2000 இம்மாதம் வழங்கப்படும் மற்றும்,
- அனைத்து மகளிரும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் ஆகிய 3 முத்தான திட்டங்களை சற்று முன் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மேலும் இரண்டு உத்தரவுகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறைக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்ததாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு செய்யப்படும் என்ற கோப்பிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த ஐந்து முத்தான அறிவிப்புகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அடுத்தடுத்து மேலும் சில அதிரடி அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.