சினிமா செய்திகள்
வெற்றிமாறனின் ‘வடசென்னை’ பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்
![andrea pisasu 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/andrea-pisasu-2.jpg)
வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சரத்குமார் நடித்த ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா, அதன் பின்னர் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பக்கபலமாக இருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொரோனா காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கொரோனாவில் இருந்து விலகியே இருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் நடிகை ஆண்ட்ரியா இந்த கொரோனா சமயத்தில் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பதிவிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அறையில் பாடல் ஒன்றை பாடும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். ஆண்ட்ரியா ஒரு மிகச் சிறந்த பாடகி என்பது அனைவரும் அறிந்ததே.