தமிழ்நாடு
முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு முதன்முறையாக வாழ்த்து சொன்ன சீமான்!
![MK Stalin - Seeman - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/MK-Stalin-Seeman.jpg)
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஆளுங்கட்சியான அதிமுக, 66 இடங்களில் வெற்றியடைந்துள்ளது.
இந்த இரண்டு கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் 18 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. அதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, 5 இடங்களைப் பிடித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலா 4 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன. இதில் பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பின்னரும், விசிக, 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் சட்டமன்றத்துக்குத் தங்களது கட்சி உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் தலா இரண்டு இடங்களை வென்றுள்ளன. மற்றப்படி களத்தில் மாற்று அணிகளாக நின்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதே நேரத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் சுமார் 6.85 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, சுமார் 4 சதவீத வாக்குகள் பெற்றது. அதற்கு முன்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.50 சதவீத வாக்குகளை நாம் தமிழர் பெற்றது. இதை வைத்துப் பார்க்கும் போது தேர்தலுக்குத் தேர்தல் அந்தக் கட்சி நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது.
தேர்தல் முடிவு பெற்றதில் இருந்து இதுவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வந்த நிலையில், தற்போது மு.க.ஸ்டாலினை வாழ்த்தியுள்ளார்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்ழ