தமிழ்நாடு
ஹரி நாடார் கேரளாவில் கைது; காரணம் என்ன?
பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார், கேரளாவில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் 37,727 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் வந்து பலருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆலங்குளம் தொகுதியைப் பொறுத்த வரையில் மனோஜ் பாண்டியன், 74,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் முக்கியப் புள்ளியான பூங்கோதை ஆலடி ஆருணா, 70,614 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
பூங்கோதையின் வெற்றியைத் தட்டிப் பறித்ததில் ஹரி நாடாருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட அவர் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஹரி நாடார் சுமார் 12 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும், அந்த குற்றத்திற்காக கேரளாவில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.