இந்தியா
8 சிங்கங்களுக்கு கொரோனா: ஐதராபாத் உயிரியல் பூங்கா நிர்வாகிகள் அதிர்ச்சி!
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி மனித குலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. கடந்த ஓராண்டில் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் பல உயிர்கள் கொரோனா வைரஸ்க்கு பலியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளி வந்துள்ளன. ஏற்கனவே ஒரு சில புலிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி 8 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் இருந்த எட்டு சிங்கங்களுக்கு திடீரென சுவாச பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த சிங்கங்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள எட்டு சிங்கங்களுக்கு கொரோனா என்ற தகவல் அந்த பூங்கா நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.