தமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரித்த அதிகாரிகள்; மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வரும் 6 ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை தான் செயல்படும் என்றும், மற்ற அத்தியவசியத் தேவையற்ற கடைகள் வரும் 20 ஆம் தேதி வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். நேற்றைய தினம் தமிழக அரசு வகுத்துள்ள கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்த தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், வருவாய்த் துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கட்டுப்பாடுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன் மூலம் மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனால் இதனை அனைத்துத் துறைகளும் சிறப்பாகக் கண்காணித்துச் செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.