தமிழ்நாடு
தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி வழக்கு: விரைவில் விசாரணை!
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் சேர்ந்த பாலாஜி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார், பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் ’தமிழகத்தில் தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 6 ஆயிரத்து 650 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்றும் அரசின் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா பிரிட்டன் ரஷ்யா போன்ற நாடுகளில் தடுப்பூசி மருந்துகளை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்க கூடிய நிலையில் இந்தியாவில் பொதுமக்களுக்கு 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த மருந்துகள் இதுவரை 5 சதவீத மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தற்போது இருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியில் உள்ளவர்கள் காணாது என்றும் எனவே கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாநிலங்களின் இடையே உள்ள போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் பொது ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.