தமிழ்நாடு
தோற்றாலும் கவனம் ஈர்த்த நாம் தமிழர் கட்சி; எத்தனை சதவீத ஓட்டு வாங்கினார்கள்?
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஆளுங்கட்சியான அதிமுக, 66 இடங்களில் வெற்றியடைந்துள்ளது.
இந்த இரண்டு கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் 18 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. அதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, 5 இடங்களைப் பிடித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலா 4 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன. இதில் பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பின்னரும், விசிக, 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் சட்டமன்றத்துக்குத் தங்களது கட்சி உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் தலா இரண்டு இடங்களை வென்றுள்ளன. மற்றப்படி களத்தில் மாற்று அணிகளாக நின்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதே நேரத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் சுமார் 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 3வது இடத்தில் வந்துள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகின்றன. சிலர், நாம் தமிழர் கட்சி, சுமார் 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், நாம் தமிழர் கட்சி தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை எடுத்துவிட்டது.