தமிழ்நாடு
இன்று மே 1 விடுமுறை தினம்: மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்குமா?
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 19 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் சென்னையில் 6,000ஐ விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மின்சார ரயில்கள் இயக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 600 மின்சார ரயில்கள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் வார நாட்களில் 480 மின்சார ரயிலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் 100 மின்சார ரயிலும் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் அரசு விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமை இயக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் மின்சார ரயில்கள் இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மே தினம் விடுமுறை என்பதால் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் 100க்கும் குறைவான மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட முதலில் அறிவித்து இருந்தது. ஆனால் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்றைய தினம் அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று மே தினம் வழக்கம்போல் வார நாட்களில் இயங்கும் 480 ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.