தமிழ்நாடு
மே 1ஆம் தேதி முழு ஊரடங்கா? நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் மே 2-ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவை அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு தற்போது நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. மே ஒன்றாம் தேதி மே தினம் என்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை என்பதால் ஊரடங்கு தேவை இல்லை என்றும், மே இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கமான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே மே ஒன்றாம் தேதி ஊரடங்கு தேவையில்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் ஊரடங்கு குறித்து நாளை கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு நீதிமன்றம் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் விடுமுறையாக இருந்தாலும் விடுமுறை தினத்தில் அதிக மக்கள் வெளியே வருவார்கள் என்பதால் ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது. ஆனால் விடுமுறை தினம் என்பதால் தமிழக அரசு ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்திருப்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.