தமிழ்நாடு
தடுப்பூசி வாங்க ரூ.2 லட்சம் டிடி: மன்சூர் அலிகானுக்கு நீதிபதி உத்தரவு
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறிய மன்சூர் அலிகானுக்கு நீதிபதி நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி அறிவுரையும் கூறி இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறினார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க நடிகர் மன்சூரலிகான் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுரை கூறினார். தடுப்பூசி குறித்து வதந்தி பரப்ப கூடாது என்றும், பதற்றமான சூழ்நிலையை உருவாக்க கூடாது என்றும், அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுரை கூறினார்.
மேலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்ட நீதிபதி தடுப்பூசி வாங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் ரூபாய் 2 லட்சம் டிடி செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இந்தநிலையில் மன்சூர் அலிகான் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதை அடுத்து அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.