தமிழ்நாடு
மே 1, 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கா? இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்!
![vote counting5 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/vote-counting5.jpg)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால் வாக்கு எண்ணும் பணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை என்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கெடுபிடியால் தேர்தல் ஆணையம் விதித்துள்ள இந்த கட்டுப்பாட்டின்படி வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து மே 1 மற்றும் மே 2 ஆகிய இரண்டு தேதிகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து மே 1 மற்றும் மே 2 ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நோய்த்தொற்று அதிகம் இருக்கும் மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் புதிய ஆட்சி பதவியேற்றவுடன் இதுகுறித்த உத்தரவுகள் வெளிவரலாம் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.