தமிழ்நாடு
3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசு அதிரடி
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் சுமார் 5000 பேர்களும், தமிழகத்தில் தினமும் 15 ஆயிரம் வருகின்றனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் பெரிய கடைகளை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெரிய கடை என்றால் என்ன? எந்த கடைகளை மூட சொல்வது என்பது குறித்த விளக்கமான அறிவிப்பு தற்போது தமிழக அரசிடம் இருந்து வந்துள்ளது.
இதன்படி 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் பெரிய கடைகளை அதாவது 3000 சதுர அடிகளுக்கு அதிகமான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சில மாவட்ட ஆட்சியர்களுக்கு எந்தெந்த கடைகளை மூடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதாகவும் அதனை சரிசெய்ய மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.