தமிழ்நாடு
வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறதா?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை ஏற்பட்டால் மே இரண்டாம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிப்போம் என்றும் வாக்கு எண்ணிக்கையை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க உத்தரவிடுவோம் என்றும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலின்போது கடைப்பிடிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை சரமாரியாக தாக்கியது. அரசியல் கட்சிகளுக்கு சரியான கட்டுப்பாடுகளை விதிக்காதது தேர்தல் ஆணையத்தின் தவறு என்றும் தேர்தல் ஆணையத்தால் தான் இந்த அளவுக்கு கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவியது என்றும் அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்காமல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்றுகிரகத்தில் இருந்தார்களா? என்றும் சரமாரியாக கண்டனம் தெரிவித்தது. மேலும் தேர்தல் ஆணையத்தை கொலை வழக்கில் பதிவு செய்தால் கூட தவறில்லை என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால் மே இரண்டாம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிப்போம் என்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க உத்தரவிடுவோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் அலுவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.