தமிழ்நாடு
நாளை முழு ஊரடங்கு: டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம்!
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நாளை டாஸ்மாக் கடைகள் இருக்காது என்பதால் இன்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து உள்ளதை பார்க்கும்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதும் டாஸ்மாக் உள்பட முக்கிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதை அறிந்த குடிமகன்கள் இன்றே பாட்டில் பாட்டிலாக மதுபாட்டில்களை வாங்கி குவித்து வருகின்றனர். மேலும் மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்காமல் அவர்கள் மதுபாட்டில்களை வாங்கி குவித்து வருவதை பார்க்கும் போது அவர்கள் மதுக்களை வாங்குகிறார்களா? அல்லது கொரோனாவை வாங்குகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு என்பதால் அம்மாநிலத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கவில்லை. இதனையடுத்து புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்து ஏராளமானோர் மதுக்களை வாங்கிக் குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.