தமிழ்நாடு
திரையரங்குகளில் இன்று முதல் இரவுக்காட்சி ரத்து: மாலைக்காட்சி தொடங்குவது எப்போது?
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் திரையரங்குகளில் காட்சிகளில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இரவு 9 மணிக்கு மேல் திரையரங்குகளில் காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது என்பதால் இரவு காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 மணிக்கு மணிக்கு மேல் திரையரங்குகள் செயல்படக் கூடாது என்பதால் 9 மணிக்குள் மாலைக்காட்சி முடிக்கவும் திரையரங்குகள் திட்டமிட்டுள்ளன. மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் காட்சிகள் தொடங்கும் என்றும் அந்தந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் பொறுத்து காட்சிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8 அல்லது 8.30 மணிக்குள் காட்சிகள் முடிவடையும் வகையில் மாலை காட்சிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டை மாநிலமான கேரளாவில் மாலைக்காட்சி மற்றும் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இரவு காட்சி மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தற்போது புதிய திரைப்படங்களை வெளியிட தயக்கம் காட்டி வருகின்றனர் என்பதும் ஒருசில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.