தமிழ்நாடு
இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது: தெற்கு ரயில்வே அதிரடி முடிவு
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெற்கு ரயில்வேயும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்கள் ரயில் நிலையத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கினாலும் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாது.
ஆனால் அதே நேரத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பயணிகளுடன் வரும் ஒருவருக்கு மட்டும் ஒரு பிளாட்பாரம் டிக்கெட் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அல்லாதவருக்கு ரயில் நிலையங்களில் நுழைய தடை என்ற அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே நிலையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும் மேற்குறிப்பிட்ட சில ரயில் நிலையங்கள் தவிர மற்ற ரயில் நிலையங்களில் வழக்கம்போல் பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.