தமிழ்நாடு
வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ல் ஊரடங்கு உண்டா: தேர்தல் ஆணையர் விளக்கம்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி ஞாயிறு அன்று எண்ணப்படும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு அதிரடியாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டது. நாளை முதல் அமலுக்கு வரும் இந்த ஊரடங்கில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மே இரண்டாம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு இருக்குமா? என்ற கேள்வியும் பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதை அடுத்து அன்றைய தினம் ஊரடங்கு இருந்தாலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்கு என்னும் இடத்திற்கு வந்து வாக்கு எண்ணிக்கையை பார்வையிடலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை சம்பந்தமான அனைத்து பணிகளையும் தங்குதடை இல்லாமல் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கு மட்டும் முழு ஊரடங்கு மே இரண்டாம் தேதி பொருந்தாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.