தமிழ்நாடு
பாக்யராஜ் செய்த ஒருவிரல் புரட்சி.. சர்காரை காலி செய்தது எப்படி?
சென்னை: சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.
சர்கார் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருந்த சமயத்தில், இந்த படத்தின் கதை என்னுடையது முறையிட்டார் வருண் என்கிற ராஜேந்திரன். தன்னுடைய செங்கோல் பட கதையை திருடி படம் எடுத்துவிட்டார் ஏ.ஆர். முருகதாஸ்.
இந்த கதையை தான் ஏற்கனவே தென்னிந்திய கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவிட்டு இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில்தான் சீனுக்குள் வந்தார் தென்னிந்திய கதையாசிரியர்கள் சங்க தலைவர் பாக்யராஜ். நேரடியாக சர்கார் படத்தின் கதை செங்கோல் படத்தின் கதை என்று கூறினார்.
அலுவலக பேச்சுக்களில் மட்டுமில்லாமல் தான் கொடுத்த அனைத்து பேட்டிகளிலும் இந்த படத்தின் கதை செங்கோல் படத்தின் கதைதான் என்று அடித்துக் கூறினார். ஆனால் இதை ஏ.ஆர் முருகதாஸ் தொடர்ந்து மறுத்து வந்தார்.
என்னுடைய பவுண்டட் கதையை பாக்யராஜ் பார்க்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான பாக்யராஜ் தான் படித்த மொத்த செங்கோல் கதையை அப்படியே சொன்னார். இதுதான் சர்கார் கதையும் என்று ஒரே அடியாக அதிரடி காட்டினார். இவர் இப்படி கதையை வெளிப்படையாக சொல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.