தமிழ்நாடு
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை- விரிவான விவரம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்துள்ளது. இப்படியான சூழலில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இது பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.