தமிழ்நாடு
பரவும் கொரோனா: மக்களுக்கு சுகாதார செயலர் ராதாகிருஷ்ணனின் ஒரே கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், மாநில மக்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் நாம் பதற்றப்படக் கூடாது. இந்த நேரத்திலும் குறிப்பிட வேண்டியது இறப்பு விகிதம் 1.35% என்று மிகவும் குறைந்துள்ளது. முதலில் நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது 45 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். நமக்குத் தொற்று வராது, கூட்டத்தில் முகக்கவசம் இல்லாமல் சென்றாலும் எனக்கு கொரோனா வராது என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
சங்கிலி என்பார்கள், நம் கண்ணுக்குத் தெரியாமல் பரவும் கிருமி அது. அதை உடைக்க வேண்டும் என்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் மூலமாகத்தான் உடைக்க முடியும். பதற்றப்பட வேண்டாம். நமக்கு அருமையான மருத்துவ முறை உள்ளது. சென்னை, கோவை போன்ற இடங்களில் பொதுமக்கள் அவர்களாகத் தேர்வு செய்யும் மருத்துவமனைக்குச் செல்வதால் அதற்கு வழிகாட்ட டிஎம்எஸ், டிடிஎச்சில் கட்டுப்பாட்டறை அமைத்துள்ளோம்.
பொதுமக்கள் இந்த நேரத்தில் எண்ணிக்கையைப் பார்த்துப் பதற்றமடைந்து அதே நேரத்தில் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது. ஒருவருக்கு வந்தால் 10 பேருக்கு வந்துவிடுகிறது. அந்தச் சங்கிலியை உடைக்க வேண்டும். நேற்று 75,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இன்று 1 லட்சம் பேர் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுடைய ரிப்போர்ட் 2 லட்சம் பேர் ஒரு நாளைக்குப் போடவேண்டும் என்பதே.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.