கிரிக்கெட்
IPL- 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படியொரு சாதனையா..?- இதுக்கு மேக்ஸ்வெல் ஆடாமலேயே இருந்திருக்கலாம்
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணி இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி, நல்லத் தொடக்கத்துடன் தொடரை ஆரம்பித்துள்ளது. இதுவரை ஆர்.சி.பி ஒரு முறை கூற ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்த காரணத்தினால் விராட் கோலி மீது பல தரப்பினரும் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார்கள்.
இந்த முறை ஐபிஎல் தொடருக்கு ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்லை பல கோடி ரூபாய் ஏலத்துக்கு பெங்களூர் எடுத்தது. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இரண்டு போட்டிகளிலும் நன்றாக விளையாடியுள்ளார் மேக்ஸ்வெல்.
ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் ஒரு கதாநாயகன் போல அறிமுகமானார். பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் அவரின் அதிரடி காணாமல் போனது. அதுமட்டுமில்லாமல் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியாமல் அவர் தடுமாறினார். அதனால் அவரை பஞ்சாப் அணி கழட்டிவிடவே டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. அங்கும் அவரின் சொதப்பல் தொடர்ந்ததால் அவர்களும் கழட்டிவிட இந்த முறை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் அவர் முதல் போட்டியில் 30 ரன்கள் எடுத்திருந்தார். நேற்று முன்தினம் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை நின்று 57 ரன்கள் சேர்த்தார். இது அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேக்ஸ்வெல்லின் இந்த அரைசதம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின், ஐபிஎல் தொடரில் அடிக்கப்படும் அரைசதம் ஆகும்.