தமிழ்நாடு
சென்னையில் கொரோனா தடுப்பூசி நிலவரம்: ஆணையர் பிரகாஷ் முக்கிய தகவல்
இந்தியாவைப் போல தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் அதிகம் பாதிப்படுவர்கள் உள்ளார்கள். இதையொட்டி, சென்னையில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சென்னையில் 80 லட்சம் பேர் உள்ளனர். அதில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 22 லட்சம் பேர். அதில் 9 லட்சம் பேருக்குப் போட்டுவிட்டோம். அதாவது 42% எட்டிவிட்டோம். அதனால் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. தடுப்பூசிகள் நிறைய எண்ணிக்கையில் உள்ளன. 10 லிருந்து 15 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஆகவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாராளமாக எங்களது 450 தடுப்பூசி மையங்களில் தானாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
அதுவல்லாமல் குடியிருப்பில் மொத்தமாக 100, 150 பேர் 45 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளார்கள் என்றால் எங்களது மருத்துவக் குழுவினர் நேரடியாக வந்து ஊசி போடத் தயாராக உள்ளனர். அதுபோன்று ஆயிரக்கணக்கான இடங்களில் போட்டு வருகிறோம். அதை எங்கள் மருத்துவர்கள், அதிகாரிகள் முன்னின்று நடத்தி வருகின்றனர். வேகமாக முன்வந்தால் மீதமுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 10, 12 லட்சம் பேருக்கும் அடுத்துவரும் ஒரு வாரத்தில் போட்டு தடுப்பூசியைப் போட்டு முடித்துவிடலாம்.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.