உலகம்
நஷ்ட ஈடு கொடுக்காத எவர்க்ரீன் கப்பலை பறிமுதல் செய்த எகிப்து: பெரும் பரபரப்பு
சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிய நிலையில் அந்த கப்பல் ஒரு வாரத்திற்குப் பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்களால் மீட்கப்பட்டது. இந்த ஒரு வாரத்தில் சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள் காத்திருந்ததால் எகிப்தின் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த இழப்பை சரிகட்டும் வகையில் ஒரு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சுயஸ் கால்வாய் நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் எவர்க்ரீன் கப்பல் உரிமையாளர் இழப்பீடு தர முடியாது என்று கூறியதை அடுத்து சுயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இழப்பீடு வழங்கும் வரை எவர்கிரீன் கப்பலை பறிமுதல் செய்ய எகிப்து அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாய் நிர்வாகிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இழப்பீடு தொடர்பாக எகிப்து அரசும், எவர்க்ரீன் கப்பல் நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.