இந்தியா
மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, ரயில்களில் பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே பிரிவு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா 2வது அலை கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சவாலாக இருந்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்களில் பாதுகாப்பான பயணத்திற்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளை கேட்டுக் கொள்கிறது.
அந்த வகையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கை சுகாதாரம் போன்ற அடிப்படை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். தேவையற்ற பயணம் மற்றும் குழுக்களாக பயணம் செய்வதை தவிர்க்கவும்.
டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் தளங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணத்தை பயணிகள் தவிர்க்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுக்காக காத்திருப்பவரானால் அல்லது தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் அல்லது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பயணத்தை தவிர்க்கவும். வெளி மாநிலங்களில் இருந்து தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் பயணிகள் இ-பாஸ், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற நெறிமுறைகளை பயணத்தின்போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்’ எனத் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.