தமிழ்நாடு
‘பெரியார் சாலை’-க்கு வேறு பெயர்- கருப்பு வண்ணம் தீட்டி அழிக்கப்பட்டது!
சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’ என்னும் பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட புதிய பதாகையில், பெரியாரின் பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பின் சென்னைக் கிளையைச் சேர்ந்த உறுப்பினர்கள், பெயர் பலகையில் ‘கிராண்டு வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்னும் பெயரை கறுப்பு வண்ணம் தீட்டி மறைத்துள்ளனர். இது குறித்தான புகைப்படத்தை அவர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அது வைரலாகி வருகிறது.
படங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம், ‘மறைந்த முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா நடத்தி, சென்னை பூவிருந்தவல்லி சாலையை, மக்களின் கோரிக்கை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா சாலை என்று மாற்றியதை தற்ப்போதைய எடப்பாடி அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
இதைக் கண்டித்து மாற்றப்பட்ட பெயர்களை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு ‘பெரியார் ஈ.வெ.ரா சாலை’ என்று மாற்றாவிட்டால் பெயர்கள் தொடர்ந்து அழிக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளது.