இந்தியா
50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அங்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கேரளாவுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் உடனடியாக தேவை என்றும் இதனை மத்திய அரசு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை தீவிரமாக இருப்பதாகவும் உடனடியாக தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் இதனையடுத்து விரைவில் மத்திய அரசு கேரளாவிற்கு தடுப்பூசி அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.