தமிழ்நாடு
மதுரையில் அழகர் ஆற்றில் இறங்க தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதன் காரணமாக மதுரையில் பல்வேறு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் எடுத்து வருகிறார். அந்த வகையில் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார் கடந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்ற போதும் உள்திருவிழாவாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடைபெறும் என்றும் கோயில் வளாகத்திலேயே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தொலைக்காட்சியில் இந்த திருவிழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். குறிப்பாக மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மதுரையில் கொரோனா அதிகம் பரவிய 21 பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது