தமிழ்நாடு
தமிழக அரசின் கட்டுப்பாடுகளுக்கு திருமண மண்டப உரிமையாளர்கள் கடும் கண்டனம்!
![marriage hall - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/marriage-hall.jpg)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து நேற்று தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. அந்த அறிவிப்பில் ஒன்று திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான். இதனால் திருமண மண்டப உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
100 பேர் மட்டுமே அனுமதி என்றால் எந்தத் திருமணமும் திருமண மண்டபத்தில் நடைபெறாது என்றும் வீட்டில் அல்லது கோவில்களில் திருமணத்தை நடத்தி கொள்வார்கள் என்றும் அதனால் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கடும் சிக்கல் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டாஸ்மாக் உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்கு எந்தவித விதியும் இல்லாதபோது சுப நிகழ்ச்சியான திருமண மண்டபத்திற்கு மட்டும் கட்டுப்பாடுகள் என்பது சரியல்ல என திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதேபோல் தியேட்டர் கேளிக்கை விடுதி உள்ளிட்டவை 50 சதவீதம் இயங்கும்போது திருமணத்திற்கு மட்டும் 100 பேர் என்பது நியாயமான விதியாக இல்லை என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழக அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்து திருமண மண்டபங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் திருமண மண்டபத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் மாஸ்க் அணிவது உள்பட கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு என்ன முடிவு செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.