தமிழ்நாடு
காய்கறி கடைகளுக்கு தடை, டாஸ்மாக் கடைகளுக்கு தடையில்லையா? பொதுமக்கள் ஆவேசம்
![koyambedu1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/koyambedu1.jpg)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நேற்று அதிரடியாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும், திருமணத்திற்கு 100 பேர்கள் மட்டுமே அனுமதி என்றும், இறுதி நிகழ்ச்சிக்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் ஆட்டோக்களில் இரண்டு பயணிகளும் கார்களில் மூன்று பயணிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை காய்கறி வணிகத்திற்கு அனுமதி இல்லை என்று கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மொத்த காய்கறி சந்தை மட்டும்தான் கோயம்பேட்டில் இயங்க வேண்டும் என்றும் சில்லரை காய்கறி கடைகள் இயங்கக் கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த உத்தரவு காரணமாக காய்கறி வாங்குவதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என்றும் சில்லரை வியாபாரிகளுக்கும் கட்டுப்பாடுகள் வழங்கி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
சில்லறை காய்கறி கடைகளுக்கு தடை விதித்திருக்கும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளுக்கும் பார்களுக்கும் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை விதிக்காதது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். காய்கறியை விட டாஸ்மாக் அவசியமா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு தமிழக அரசின் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.